காரைக்கால்,
புதுச்சேரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம் காரைக்கால் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது:-
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணன், அமைச்சர்கள், கூட்டணிக் கட்சியினர் ஆதரவுடன் போட்டியிட்ட என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக காரைக்கால் வந்தேன்.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலர் ஹைட்ரோ கார்பன் திட்டம் காரைக் காலுக்கு தேவை இல்லை என கூறியுள்ளனர். காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சொல்லியிருக்கிறார். ஆகவே இத்திட்டம் காரைக்காலில் வராமல் தடுக்கப்படும். அதற்கான நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுக்கும்.
மேலும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் ஒன்றாக இணைந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவது மற்றும் மக்களுக்கான உரிமையை வாங்கித் தருவதுதான் எங்களின் முக்கிய கடமையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் ஏ.சுப்ரமணியன் மற்றும் பலர் உடனிருந்தனர்.