கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் நேற்று முன்தினம் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஒரு போட்டியாக இட்லி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகமான இட்லிகளை சாப்பிடும் நபருக்கு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த போட்டியில் 10 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் அதே கிராமத்தைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சின்னத்தம்பியும்(வயது 42) கலந்து கொண்டார். இதில் அவர் வேகமாக சாப்பிட்ட போது தொண்டையில் இட்லி சிக்கிக் கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு போட்டி நடந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பாண்டிக்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியது. சின்னதம்பிக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.