மாவட்ட செய்திகள்

டிக்கெட் எடுக்க மறுத்து பஸ் கண்டக்டர்-டிரைவர் மீது தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு

பச்சையப்பன் கல்லூரி அருகே பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டர் மற்றும் டிரைவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை,

சென்னை பிராட்வேயில் இருந்து எம்.எம்.டி.ஏ. காலனி நோக்கி மாநகர பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சக்திவேல் ஓட்டிச்சென்றார். கண்டக்டர் கண்ணன் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்தார்.

பச்சையப்பன் கல்லூரி அருகே பஸ் நின்றபோது, ஏராளமான கல்லூரி மாணவர்கள் பஸ்சில் ஏறினார்கள். பாஸ் இல்லாத மாணவர்களை டிக்கெட் எடுக்கும்படி கண்டக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டார். ஆனால் பாஸ் இல்லாமல் பயணித்த மாணவர்கள், டிக்கெட் எடுக்க மறுத்து தகராறு செய்தனர்.

உடனே பஸ் ஓரமாக நிறுத்தப்பட்டது. பஸ்சில் பயணித்த மாணவர்கள் சிலர் கண்டக்டர் கண்ணனை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். டிரைவர் சக்திவேலுவும் தாக்கப்பட்டார். இதுபற்றி கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது 4 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.