மாவட்ட செய்திகள்

தூய்மை பணிகளில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு விருது; சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வழங்கினார்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்வதில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை தூய்மை பணியாளர் அங்கம்மாள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டு சிறப்பாக தூய்மை பணிகள் ஆற்றிய துப்புரவு மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதை கமிஷனர் கோ.பிரகாஷ் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளை தூய்மையாக வைக்கவும், சுகாதாரமாக பராமரிக்கவும் பல்வேறு நவீன தொழில்நுட்பம் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாதது. இந்த தூய்மை பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இணை கமிஷனர் திவ்யதர்ஷினி, துணை கமிஷனர்கள் பி.ஆகாஷ், பி.என்.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT