மாவட்ட செய்திகள்

மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி

விழிப்புணர்வு பிரசாரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீரின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பிரச்சார வாகனத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நீர் மட்டம் உயரும்

மழைநீரை சேகரிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.மழைநீரை சேகரித்தால்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நீரின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும். மேலும் மழைநீரை சேகரிப்பதால் விவசாய பயன்பாட்டிற்கு தேவைப்படும் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயரும். கோடைக்காலங்களில் மழைநீரின் தேவை இன்றியமையாததாக உள்ளது.

எனவே பொதுமக்களுக்கு மழைநீரை சேகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு திரையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மழைநீர் சேகரிப்பு

பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி அவற்றை பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாக பொறியாளர், உதவி பொறியாளர், உதவி நிலநீர் வல்லுனர் ஆகியோர் கலந்துகொண்டனர்.