பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் தெரணி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசியதாவது:-
அனைத்து கிராம பொதுமக்களும் பயன்பெறும் வகையில் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும், தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு நவீன வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதி முழுவதும் விவசாயத்தை நம்பியே மக்கள் உள்ளனர். அதிகளவில் மானாவாரி நிலங்களும், புன்செய் நிலங்களும் அதிகளவில் உள்ளன. எனவே, விவசாயிகள் நவீன வேளாண்மை கருவிகளை பயன்படுத்தி விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற விவசாயிகள் முன்வர வேண்டும் என்று கூறினார்.
முகாமில் வருவாய்த்துறை சார்பில் 65 பேருக்கு ரூ.5 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பிலும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 95 பேருக்கு என மொத்தம் 224 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார். முகாமில் பெறப்பட்ட 113 மனுக்களின் 110 மனுக்கள் ஏற்கப்பட்டது. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மேலும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறைகளின் மூலம் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினர்.
இதில் கோட்டாட்சியர் கதிரேசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் மனோகரன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சுதர்சன், கால்நடைத்துறை இணை இயக்குனர் செங்கோட்டையன், சமூக பாதுகாப்புத்துறை அலுவலர் பூங்கொடி, ஆலத்தூர் தாசில்தார் சீனிவாசன், சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் ஷாஜகான், வட்டார வளர்ச்சி அலு வலர்கள் தயாளன், இளங்கோவன், வட்ட வழங்கல் அலுவலர் பழனிச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண் டனர்.