மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 64). இவரது மனைவி சகுந்தலா(55). இவர்கள் இருவரும் சென்னையில் வேலை பார்த்து வரும் தங்களது மகன் கோபாலகிருஷ்ணனை பார்ப்பதற்காக கடந்த 2 வாரத்திற்கு முன்பு சென்னைக்கு சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கவேல் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் அருகில் உள்ள மாயவன்(55) என்ற கூலித்தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்தபோது எதிர் வீட்டில் இருந்த வைத்தி என்பவர் வெளியே வருவதைக் கண்ட மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க வைத்தி மற்றும் கிராம மக்கள் சிலர் துரத்தி சென்று உள்ளனர். அப்போது மர்ம நபர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டி தாக்க முயன்றனர். இதனால் கிராம மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இதையடுத்து மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து தங்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பின்புதான் வீட்டில் திருட்டுபோன பொருட்கள் குறித்த விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் மர்ம நபர்கள் தப்பியபோது போட்டு விட்டுச்சென்ற பைகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் வீட்டில் இருந்த பாதாம் பருப்பு, ஐஸ்கிரீம், முந்திரி உள்ளிட்ட தின்பண்டங்கள் இருந்தது தெரியவந்தது. அவர்கள் விட்டுச்சென்ற மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.