கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில கடந்த 2 மாதமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. இதனால் நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக காலை 8 மணி முதலே வெயிலின் தாக்கம் தொடங்கியது. நேரம் ஆக, ஆக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமப்பட்டார்கள். அதே போல வழக்கத்திற்கு மாறாக நேற்று சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. பொதுமக்கள் பலர் வெளியே வராமல் வீடுகளில் முடங்கினார்கள். அக்னி நட்சத்திரம் தொடங்கிய முதல் நாளான நேற்று மாவட்டத்தில் 102 டிகிரி வெயில் அடித்தது.
இந்த அனல் வெயிலால் ஜூஸ்கள், குளிர்பானங்கள் விற்பனை ஜோராக நடந்தது. அதே போல இளநீர், நுங்கு, பதனீர், தர்பூசணி ஆகியவை விற்பனையும் மும்முரமாக இருந்தது. பொதுமக்கள் குளிர்ச்சி தரும் பழங்களை வீடுகளுக்கு வாங்கி சென்றார்கள். அதே போல கிருஷ்ணகிரியில் கடந்த சில நாட்களாக மின்தடை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. நேற்றும் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.