மாவட்ட செய்திகள்

காகிதமில்லா சேவையில் புது முயற்சி டிக்கெட் பரிசோதகர்களுக்கு ‘டேப்-லெட்’ வழங்கும் புதிய திட்டம்

தெற்கு ரெயில்வேயின் காகிதமில்லா சேவை திட்டத்தின் புது முயற்சியாக, டிக்கெட் பரிசோதகர்களுக்கு ‘டேப்-லெட்’ வழங்கும் திட்டம் சோதனை முறையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.

தினத்தந்தி

சென்னை,

இந்திய ரெயில்வேயிலேயே அதிக வருமானம் ஈட்டித்தருவது தெற்கு ரெயில்வே தான். 90 சதவீதம் பேருக்கும் அதிகமாக முறையாக டிக்கெட் எடுத்து பயணிப்பது தெற்கு ரெயில்வேயில் மட்டும் தான். இதனால் 16 ரெயில்வே மண்டலங்களிலும் தெற்கு ரெயில்வேக்கு தனி மவுசு இருக்கிறது.

அதேவேளையில் பயணிகளுக்கான பயனுள்ள திட்டங்களை முன்னெடுப்பதிலும் தெற்கு ரெயில்வே சிறப்புக்குரியதாகவே விளங்கி வருகிறது. ரெயில் நிலைய தூய்மைப்பணி, சாரண-சாரணியர் படை, பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கை உள்பட பல்வேறு பிரிவுகளில் தெற்கு ரெயில்வே விருதுகளை பெற்று இருக்கிறது.

அந்தவகையில் தெற்கு ரெயில்வே தற்போது காகிதமில்லா சேவை திட்டத்தில் தீவிரம் காட்டிவருகிறது. தெற்கு ரெயில்வேயில் காகித பயன்பாடு என்பது இன்றியமையாதது. ஆனால் நவீன தொழில்நுட்ப பயன்பாடு காரணமாக ரெயில் டிக்கெட்டை கூட செல்போனில் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு தெற்கு ரெயில்வே திட்டங்களை வகுத்து தந்திருக்கிறது. பல நவீன செயலிகள் மூலம் காகிதமில்லா டிக்கெட் சேவையை சிறப்பாக கையாண்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரெயில் பெட்டிகளில் ஒட்டக்கூடிய முன்பதிவு அட்டவணைக்கும் (ரிசர்வேஷன் சார்ட்) சத்தமில்லாமல் விடுதலை கொடுக்கப்பட்டது. ஆனாலும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு வழங்கப்பட கூடிய பயணிகள் விவரம் குறித்த அட்டவணை காகிதத்திலேயே கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறையிலும் காகித பயன்பாட்டை குறைக்க முடியுமா? எனும் கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக டிக்கெட் பரிசோதகர்களின் கையில் இருக்கும் காகிதங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட இருக்கிறது. நவீன காலத்துக்கு ஏற்ப இனி டிக்கெட் பரிசோதகர்களும் கையில் டேப்-லெட் (கையடக்க கம்ப்யூட்டர்) உடன் வந்து நம்மை பரிசோதிக்க போகிறார்கள். அந்த திட்டத்துக்கான முன்னோட்டம் இன்று (திங்கட்கிழமை) அரங்கேறுகிறது.

தெற்கு ரெயில்வேயின் அதி முக்கிய அங்கமான சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இன்று காலை சில ரெயில்களில் இந்த திட்டம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குல்ஸ்ரஸ்தா தொடங்கி வைக்கிறார். இதற்காக டிக்கெட் பரிசோதகர்களுக்கு டேப்-லெட் வழங்கப்பட இருக்கிறது. இந்த டேப்-லெட்டில் அன்றைய தினம் குறிப்பிட்ட ரெயிலில் பயணிப்போரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் தகவலாக வரும்.

இந்த டேப்-லெட் மூலம் முன்பதிவு செய்த பயணிகள் வருகையை டிக்கெட் பரிசோதகர்கள் சரிபார்த்து கொள்ளமுடியும். அதேபோல சோதனையின்போது சிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராதம் உள்ளிட்ட அனைத்து விவரங்களில் இந்த டேப்-லெட்டில் குறிப்பிடலாம். இந்த நவீன முறையில் காகித பயன்பாடு பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மேலை நாடுகளைப் போல இங்கேயும் கையில் டேப்-லெட் உடன் டிக்கெட் பரிசோதகர்கள் நடமாட இருக்கிறார்கள்.

இந்த நடைமுறை சிறப்பான ஒன்று என்று பயணிகளும் கருத்து தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பயணிகள் சிலர் கூறியதாவது:-

ஓட்டல்களில் கூட ஆர்டர் செய்யும் உணவு வகைகளை டேப்-லெட் மூலம் பணியாளர்கள் குறிக்க தொடங்கி விட்டனர். நாட்டில் முக்கிய அங்கம் வகிக்கும் ரெயில்வே துறையில் இந்த டேப்-லெட் திட்டம் நிச்சயம் புது முயற்சியாகும். இது வரவேற்கத்தக்க ஒன்று தான். இதன்மூலம் வெளிநாடுகளில் உள்ளது போன்று, தெற்கு ரெயில்வேயிலும் டேப்-லெட் திட்டம் உயிர்பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

டேப்-லெட் மூலம் பயணிகள் விவரத்தை டிக்கெட் பரிசோதகர்கள் கையாளும் நடைமுறை ஏற்கனவே மேற்கு ரெயில்வேயில் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில்களில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை