மும்பை,
விக்ரோலியில், கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து பரப்பிய துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மும்பை விக்ரோலியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த மாணவி தனது வீட்டு குளியலறையில் குளிக்கும் காட்சி அந்த கட்டிடத்தில் உள்ளவர்களின் வாட்ஸ்அப்களில் வைரலாக பரவியது.
முதலில் அந்த வீடியோவை பார்த்தவர்கள் வேறு யாரோ இளம்பெண் என கருதி விட்டனர்.
ஆனால் சிலர் குளியலறையில் இருப்பது தங்கள் கட்டிடத்தில் வசிக்கும் மாணவி என்பதை அடையாளம் கண்டனர்.
அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்து வீடியோவையும் காட்டினர். இதை பார்த்து மாணவியும் கடும் அதிர்ச்சியில் உறைந்தார்.
பின்னர் சம்பவம் குறித்து அவர்கள் பார்க்சைட் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வீடியோ காட்சியை அந்த கட்டிடத்தில் துப்புரவு பணிகளை செய்து வரும் லகான்மானே (வயது27) என்ற வாலிபர் பரப்பியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையின் போது, மூன்றாவது மாடியில் உள்ள குளியலறை ஜன்னல் வழியாக மாணவி குளிப்பதை படம் பிடித்ததாக தெரிவித்தார். அவர் மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவரது செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.