தாம்பரம்,
கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்பதால் சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிந்தனர். தாம்பரம் சண்முகம் சாலை, மார்க்கெட் பகுதி, முத்துரங்கம் சாலையில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
அப்போது அங்கு ஆய்வு செய்ய வந்த தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, மார்க்கெட் பகுதியில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பொதுமக்கள் நோய்த்தொற்று பரப்பும் வகையில் அதிக அளவில் கூடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதேநேரத்தில் அங்கு வந்த தாம்பரம் நகராட்சி கமிஷனர் சித்ராவிடம், தாம்பரம் பகுதியில் நோய் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை தடுக்க போலீசாரிடம் சொல்லி உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அலட்சியமாக இருக்கிறீர்கள்?. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடுமையாக எச்சரிக்கை செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவருடன் தாம்பரம் நகர மன்ற முன்னாள் துணைத்தலைவர் காமராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் வந்தனர்.