ஓமலூர்,
ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
ஓமலூரை அடுத்த ஆர்.சி.செட்டிப்பட்டி பிரிவு ரோடு அருகே சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட இளம் சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் சாமுராய் குரு தலைமை தாங்கினார். இதில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஆறுமுகம், மாநில துணை செயலாளர் மணிக்குமார், மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ், பாரதி, சுரேஷ், சேட்டு, ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். 22 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் சேலம்- தர்மபுரி மெயின்ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் காடையாம்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அர்ச்சுனன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் பெரியசாமி, மதியழகன், மணி, மூர்த்தி, வீராசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காக்காபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் அய்யாவு தலைமையில் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை மகுடஞ்சாவடி போலீசார் கைது செய்து. அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆத்தூர் பஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் முத்து தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. செய்தி தொடர்பாளர் நாராயணன், செல்வம், சாமுண்டி உள்ளிட்ட 36 பேரை ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தார்.
இதேபோல் ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் மறியலில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் வானவில் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தம்மம்பட்டி அருகே உள்ள செந்தாரப்பட்டியில் திருமாவளவன் கைது செய்யப்பட்டதை கண்டித்து அங்குள்ள பஸ்நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் கக்கன்செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் ரமேஷ் அம்பேத்வளவன், பெருமாள், ரமேஷ், ஆறுமுகம், செல்வகுமார், காசிராஜன் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.