மாவட்ட செய்திகள்

ஓட்டப்பிடாரம் அருகே படைப்புழு தாக்கிய மக்காச்சோளத்தை விவசாயிகள் டிராக்டரால் அழித்தனர்

மக்காச்சோளத்தை விவசாயிகள் டிராக்டரால் அழித்தனர்

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாலுகா மக்களின் முக்கிய தொழில் விவசாயமாகும். இங்குள்ள விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகும். மக்கள் அதிகமாக உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மக்காச்சோளம் ஆகியவற்றை ஒட்டநத்தம், மலைப்பட்டி, அக்கநாயக்கன்பட்டி, குலசேகரநல்லூர், பசுவந்தனை, ஆரைக்குளம், முறம்பன், பரிவல்லிக்கொட்டை, மணியாச்சி, எப்போதும்வென்றான், குறுக்குச்சாலை பகுதிகளில் பயிரிட்டு உள்ளனர். தற்போது விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு அறுவடை செய்து வருகின்றனர்.

மழைக்காலங்களில் தொடர்ந்து மழை பெய்ததால் மகசூல் மிகக் குறைந்த அளவில் வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது வியாபாரிகள், விவசாயிகளிடம் உளுந்து குவிண்டாலுக்கு ரூ.7,200, பாசிப்பயறு குவிண்டாலுக்கு ரூ.6,500 என நிர்ணயம் செய்து வாங்கிச் செல்கின்றனர்.

மக்காச்சோளம் பயிர் படைப்புழுவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. 6 அடி உயரம் வளர வேண்டிய மக்காச்சோளம் 3 அடிக்கும் குறைவாக வளர்ந்துள்ளது.

ஆரைக்குளம் பகுதிகளில் மக்காச்சோளம் முழுவதும் படைப்புழுவால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தை விவசாயிகள் டிராக்டர் மூலம் அழித்து வருகின்றனர்.