பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் மாடுகள் சுற்றித்திரிவதாக பொதுமக்களிடம் இருந்து தொடர் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இதையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள கால்நடை மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் சென்னையின் முக்கிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கடந்த 10-ந்தேதி சுற்றித்திரிந்த 16 மாடுகளும், 11-ந்தேதி சுற்றித்திரிந்த 16 மாடுகளும், நேற்று சுற்றித்திரிந்த 8 மாடுகள் என மொத்தம் 40 மாடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டது. தொடர்ந்து பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.62 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.