ஆபத்தான மின்கம்பம்
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சி பூவாயிபட்டி தெப்பக்குளம் கரையோரத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டு அதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடுபோல் காட்சியளிக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்லும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பூவாயிபட்டி, கரூர்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
திருச்சி பொன்நகர் 2-வது மெயின் ரோட்டில் சாலையின் நடுவே பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அவற்றை சரி செய்வதற்கான மூடிகள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பள்ளமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் இதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடையின் மூடிகளை சரி செய்து சாலையின் அளவிற்கு ஏற்றார்போல் சமமாக வைத்து பள்ளத்தை சரி செய்தனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
பொதுமக்கள், பொன்நகர், திருச்சி.
திருச்சி மாவட்டம், திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளத்தை சரிசெய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
குருராஜன், ஸ்ரீரங்கம், திருச்சி.
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
திருச்சி காந்தி மார்க்கெட் கிருஷ்ணாபுரம் சாலையோரத்தில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் அழுகிய காய்கறிகள், பழவகைகள் கொட்டப்பட்டு அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றை கால்நடைகள் உண்பதற்கு வருவதினால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், காந்தி மார்க்கெட். திருச்சி.
எரியாத மின்விளக்கு
திருச்சி பொன்நகர் 3-வது மெயின் ரோடு செல்வநகர் 2-வது வீதி சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் உள்ள மின் விளக்கு இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் திருட்டு சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செல்வநகர், திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி மாவட்டம், மருதாண்டக்குறிச்சி மேலபாண்டமங்கலம் சந்தோஷ் நகர் மாரியம்மன் நகர் 3-வது இடது குறுக்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மாரியம்மன் நகர், திருச்சி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
திருச்சி சோமரசம்பேட்டை வடகபுதூர், கீழவயலூர் சாலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. மேலும் இவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கி உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், வடகபுதூர், திருச்சி.