தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அட்மா திட்ட அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். அட்மா திட்டத்தில் பணிபுரியக்கூடிய வட்டார அலுவலர்கள் 2 வட்டாரங்களை கடந்து பணி இடமாற்றம் செய்ய வேளாண் இயக்குனர் ஆணை வழங்கியது குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தை அடுத்து, பணியிட மாறுதலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. எனவே பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்து, ஏற்கனவே பணியாற்றிய வட்டாரத்திலேயே பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.