மாவட்ட செய்திகள்

புதுவை எல்லையில் கெடுபிடி வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார்

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு செல்வதை தடுக்க எல்லைப்பகுதிகளில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம், மரக்காணம், பட்டானூர், மொரட்டாண்டி, ரெட்டிச்சாவடி, கண்டமங்கலம் ஆகிய பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு செல்வதை தடுக்க எல்லைப்பகுதிகளில் தமிழக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் கோரிமேடு, புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோட்டக்குப்பம், புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் கெங்கராம்பாளையம், புதுச்சேரி- கடலூர் சாலையில் முள்ளோடை ஆகிய எல்லைப் பகுதியில் நேற்று போலீசார் தீவிரமாக கண்காணித்து கெடுபிடி செய்தனர். அப்போது புதுவையில் இருந்து தமிழகத்திற்கு செல்ல முயன்ற சரக்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதனால் பல இடங்களில் போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.