அரியலூர்
அரியலூர் மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி நேற்று அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அறிவியல் கண்காட்சியினை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு 7 தலைப்புகளில் நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் 86 பள்ளிகளிலிருந்து 286 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். இந்த அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள அனைத்து மாணவ, மாணவிகளிடம் அவர்களின் படைப்புகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்த கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். ஒவ்வொரு தலைப்புகளிலும் வெற்றி பெறும் முதல் 3 மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மான்விழி, ஜோதிமணி, பேபி மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் ஆகியவற்றின் சார்பில் செய்யப்பட்டிருந்தது.