கறம்பக்குடி,
கறம்பக்குடி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம் ஒன்றியக்குழுத் தலைவர் மாலா ராஜேந்திர துரை தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தமுள்ள 16 உறுப்பினர்களில் 15 பேர் கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியவுடன் ஒன்றிய அலுவலர் சரண்யா திட்ட அறிக்கையை வாசிக்க முயன்றார். அப்போது எழுந்த அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் ஒன்றிய நிர்வாகத்தில் பலமுறைகேடுகள் நடந்து இருப்பதாக கூறி இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். இதேபோல் ஒன்றியக்குழு துணை தலைவர் பரிமளம் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க. சுயேட்சை உறுப்பினர்கள் 13 பேர் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்துவிட்டு வெளியேறினர். பின்னர் கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் உள்பட 2 பேர் மட்டுமே இருந்ததால் தீர்மானம் ஏதும் நிறைவேற்றபடாமலேயே கூட்டம் முடிந்தது.
தி.மு.க. ஒன்றியக்குழு தலைவரை எதிர்த்து தி.மு.க. உறுப்பினர்களே அ.தி.மு.க.விற்கு ஆதரவாக வெளிநடப்பு செய்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.