ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் - சளி புள்ளி விவர சேகரிப்பை கணக்கெடுத்து வருகிறார்கள்.
புள்ளி விவரம் சேகரிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக ஈரோடு மாநகராட்சி உள்ளது. எனவே கொரோனா தொற்றை தொடக்கத்திலேயே கண்டறியும் வகையில் ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி உள்ளனர். கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் பகுதிகளில் மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று புள்ளி விவரம் சேகரித்து வருகிறார்கள். அதில் வீட்டில் உள்ள நபர்கள், அவர்களுக்கு தற்போது காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்த்தொல்லைகள் உள்ளனவா என்பது பற்றி விவரங்கள் சேகரித்து வருகிறார்கள்.
இதன் மூலம் நோய்த்தொற்றை முன்கூட்டியே தெரிந்து கொண்டு சிகிச்சை அளிக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
400 குழுவினர்
இதுபற்றி மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியில் காய்ச்சல்-சளி உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் 1,200 பேர் கொண்ட 400 குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் கணக்கெடுத்து அதன் விவரத்தை மாநகராட்சி அலுவலகத்தில் அளிப்பார்கள். அதன்பேரில் காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடி சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் தொற்று பரவல் தடுக்கப்படும்.
இவ்வாறு ஆணையாளர் எம்.இளங்கோவன் கூறினார்.