மாவட்ட செய்திகள்

கண்ணமங்கலம் அருகே செம்மரம் வெட்ட செல்ல திட்டம் தீட்டிய 5 பேர் கைது ரூ.3½ லட்சம், 2 அரிவாள் பறிமுதல்

கண்ணமங்கலம் அருகே செம்மரம் வெட்ட செல்ல திட்டம் தீட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3½ லட்சம், 2 அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று கண்ணமங்கலம் படவேடு செல்லும் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது கொளத்தூர் குளத்துமேடு பகுதியில் 2 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

உடனடியாக 2 மோட்டார்சைக்கிளுடன் 5 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் செம்மரம் வெட்ட ஆந்திர மாநிலம் செல்ல திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 62 ஆயிரம், 2 அரிவாளையும், மோட்டார்சைக்கிள்களுடன் பறிமுதல் செய்தனர். செம்மரம் வெட்ட ரூ.5 லட்சம் தேவை என்பதால், மீதியுள்ள பணத்திற்கு வழிப்பறி செய்யவும் அவர்கள் திட்டம் தீட்டியது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் ஜவ்வாதுமலை கிராமங்களான அமிர்தியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 38), செல்வம் (27), தஞ்சாம்பாறையை சேர்ந்த மணி மகன்கள் வெங்கடேசன் (20), சத்தியமூர்த்தி (19), இருள்பாறையை சேர்ந்த சூர்யா (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் மீது கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.