தஞ்சாவூர்,
தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்படும் என வைத்திலிங்கம் எம்.பி. அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உதவித்தொகை
கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வர உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றுடன் ரூ.1,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலமாக குறைந்த விலையில் காய்கறி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மே மாதத்துக்குரிய ரேஷன் பொருட்களை விலையில்லாமல் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பசி போக்க...
இந்த நிலையில் வேலையின்றி தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் பசியினை போக்குவதற்காக உணவை விலையில்லாமல் வழங்க தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி இன்று(வியாழக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி ஊரடங்கு உத்தரவு முடியும் வரை தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகம் மற்றும் திலகர் திடல் அருகே உள்ள அம்மா உணவகங்களில் 3 வேளையும் விலையில்லா உணவு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.