புதுச்சேரி,
புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. முன்னாள் மாநில அமைப்பாளருமான ஜானகிராமன் உடல்நலக்குறைவால் பிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தெரியவந்ததும் அவரிடம் விசாரிப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை கார் மூலம் புதுச்சேரிக்கு கனிமொழி எம்.பி. வந்தார்.
பிம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு சிகிச்சை பெற்று வரும் ஜானகிராமனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் திருமுடி நகரில் உள்ள தி.மு.க. பிரமுகர் வை.பாலா வீட்டிற்கு சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
கி.ராஜநாராயணன்
தொடர்ந்து லாஸ்பேட்டை அரசு குடியிருப்புக்கு கனிமொழி சென்றார். அங்கு வயது முதிர்வால் உடல் நலம் குன்றியுள்ள பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணனை சந்தித்து கனிமொழி பேசினார். உடல் நிலை குறித்து அவரிடம் கேட்டறிந்தார். பின்னர் புதுச்சேரியில் இருந்து மீண்டும் சென்னைக்கு கனிமொழி புறப்பட்டுச் சென்றார்.
இந்தநிகழ்ச்சியின்போது தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார், பொருளாளர் செந்தில்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.