தஞ்சாவூர்,
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் 1977 முதல் 1980-ம் ஆண்டுகளில் பட்டப்படிப்பை படித்தவர்கள் 37 ஆண்டுகளுக்குப்பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தற்போது பலர் வெளிநாடுகளிலும், வெளி மாவட்டங்களிலும் பணியாற்றி வருகிறார்கள். சிலர் அரசு உயர் பதவிகளிலும் பணியாற்றி வருகிறார்கள். இதில் தற்போது சென்னை வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வரும் ஸ்ரீதரும் அடங்குவார். முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய நண்பர்களை பார்த்ததும் கட்டித்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
போலீஸ் ஐ.ஜி. பேச்சு
பின்னர் நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வரவேற்றார். இதில் போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசியதாவது:-
அரசு கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் திறமை மிக்கவர்கள். ஒழுக்கத்தை கற்றுத்தருகிறார் கள். எதையும் எதிர்பார்க்காமல் தன்னலமற்ற உழைப்பை அளித்தவர்கள் பேராசிரியர்கள். அதனால் தான் நாங்கள் எல்லாம் நல்ல நிலமைக்கு வந்துள்ளோம். அது தான் பேராசிரியர்களின் சிறப்பு. எல்லா மாணவர் களும் நல்ல நிலமைக்கு வர வேண்டும். கல்லூரியில் படிக்கும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருந்தோம்.
மேலும் கல்லூரி மேம்பாடு அடைய, உள்கட்டமைப்பு வசதிகளை நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும். அது வருங்கால மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் அவர்களும் ஏதாவது உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும். இது போன்ற மாணவர்கள் சந்திப்பை ஒவ்வொரு ஆண்டும் தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மதிய உணவு
இதில் சரபோஜி கல்லூரி முன்னாள் முதல்வர்கள் அம்பிகாபதி, நல்லதம்பி, குந்தவை நாச்சியார் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நிர்மலா, முன்னாள் பேராசிரியர்கள் வைத்தியநாதன், தமிழரசன், சண் முகம், மணிகண்டன், மதிவாணன், முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் அறிவுடைநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முன்னாள் மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் மதிய உணவு சாப்பிட்டனர்.