மாவட்ட செய்திகள்

அரசு ஆஸ்பத்திரி செவிலியருக்கு அ.தி.மு.க. பிரமுகர் பாலியல் தொல்லை கலெக்டரிடம் பரபரப்பு புகார்

அ.தி.மு.க பிரமுகர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அரசு ஆஸ்பத்திரி செவிலியர், மாவட்ட கலெக்டரிடம் பரபரப்பு புகார் செய்துள்ளார்.

நெல்லை,

அ.தி.மு.க பிரமுகர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அரசு ஆஸ்பத்திரி செவிலியர், மாவட்ட கலெக்டரிடம் பரபரப்பு புகார் செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பைஜூ மனைவி மனோகரி (வயது 37). இவர் நேற்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:

நான் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். இதற்கு முன்பு ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த போது, அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஒருவர் நான் பணிபுரிகிற இடத்துக்கும், வள்ளியூர் வீட்டுக்கும் ஆட்களை அழைத்து வந்து, என்னை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார்.

இதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு எதிராகவும், என் மீதும் குற்றச்சாட்டுக்களை கூறி, எனக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினார். இதனால் நான் தற்போது ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டேன். ஆனால் அந்த நபராலும், அவருடைய ஆட்களாலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.