மாவட்ட செய்திகள்

திருமணம் ஆன 4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் திருமணம் ஆன 4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனுப்பர்பாளையம்:

திருப்பூரில் திருமணம் ஆன 4 நாளில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

4 நாட்களுக்கு முன் திருமணம்

திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை அடுத்த கீதாநகர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் பஞ்சலிங்கம். இவருடைய மூத்த மகன் விக்னேஷ்குமார் (வயது 31). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22 ந்தேதி இவருக்கும் உடுமலையை சேர்ந்த பொன்னுசாமி என்பவரின் மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்பு விக்னேஷ்குமார் மனைவியுடன் சிறுபூலுவப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் காலை நடைபயிற்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய பஞ்சலிங்கம் அவருடைய மனைவியிடம் விக்னேஷ்குமார் எங்கே போனான் என்று கேட்டுள்ளார். அதற்கு அவருடைய மனைவி மகன் குளிக்க சென்று விட்டதாக கூறி உள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இதையடுத்து குளிக்க சென்ற பஞ்சலிங்கம் குளியலறை அருகே விக்னேஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தற்கொலை செய்த விக்னேஷ்குமாரின் உடலை பார்த்து, அவருடைய மனைவியும், பெற்றோரும் கதறி அழுதனர்.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விக்னேஷ்குமார் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் திருமணம் ஆன 4 நாளில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

===========