மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி வால்பாறையில் தீயணைப்புத்துறையினர் செயல் விளக்கம்

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத் தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து வால் பாறையில் தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

வால்பாறை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளத் தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது எப்படி? என்பது குறித்து வால் பாறையில் தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

தென்மேற்கு பருவமழை

மலைப்பிரதேசமான வால்பாறையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல்வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஜூலை மாதத்தில்தான் மழை தீவிரமடையும். ஆனால் இந்த ஆண்டில், ஜூன் மாதம் முதல் வாரத்தில் மழை தொடங்கினாலும், 2-வது வாரத்திலேயே தீவிரமடைந்தது.

ஒருவாரம் பெய்த கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள நீரோடைகள், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் 160 அடி உயரம் கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் மளமள வென உயர்ந்து 103 அடியை தாண்டியது.

மீண்டும் பெய்ய வாய்ப்பு

கடந்த 3 நாட்களாக இங்கு மழை இல்லை. இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை மீண்டும் தொடர்வதற்கான கால சூழ்நிலை உருவாகி வருகிறது.

வால்பாறை பகுதியை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் மண்சரிவுகள், சாலை துண்டிப்பு, குடியிருப்புகள் பாதிப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

இதனால் ஆண்டுதோறும் வால்பாறையில் தென்மேற்கு பருவமழை காலத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் இருந்து வருவார்கள். இதன் ஒரு பகுதியாக வால்பாறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

செயல்முறை விளக்கம்

அதன்படி கூழாங்கல் ஆற்றில் வால்பாறை தாசில்தார் ராஜா தலைமையில் தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் பொது மக்களுக்கு பாதுகாப்பு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?, அவர்களை பாதுகாப்பாக காப்பாற்றி கொண்டு வருவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.

அதுபோன்று வாழைத்தோட்டம், கக்கன்காலனி ஆற்றங்கரையோர பகுதியில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ள நிவாரண முகாமும் திறக்கப்பட்டது.

தொடர்பு கொள்ளலாம்

இது குறித்து தாசில்தார் ராஜா கூறும்போது, வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஆற்றங்கரையோரத்தில் வசித்து வருபவர்கள் மழைக்காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண் டும்.

அவசர காலங்களில் தாசில்தார், நகராட்சி அலுவலகங்கள், தீயணைப்பு, போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் செந்தில் குமார், தேர்தல் துணை தாசில்தார் கருப்பையா, கிராம நிர்வாக அலுவலர் விஜய்அமிர்தராஜ், நகராட்சி துப்புரவு அதிகாரி செல்வராஜ், போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், வனவர் விஜயராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.