பேட்டை,
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 47-வது நிலைக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கர் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:-
நமது நாட்டின் கல்வி முறை மிகவும் பழமையான பாரம்பரியம் கொண்டது. குருகுலத்தில் மாணவர்கள் ஏட்டு கல்வி மட்டும் அல்லாமல் வாழ்க்கை கல்வியையும் கற்றனர். அதுபோல் தற்போதைய கல்விமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் விரும்பிய பாடத்தை தேர்ந்தெடுக்கும் வகையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள், பாடம் மட்டும் அல்லாமல் செய்முறை பயிற்சியிலும் ஈடுபட வேண்டும். அப்போதுதான் கல்வி சிறப்பாக அமையும். மாணவர்கள் ஆராய்ச்சி படிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் பாஸ்கர் பேசினார்.
தொடர்ந்து 2018-19ம் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த முடிவுக்கு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இந்த ஆண்டு முதல் மாணவர்களின் வருகைப்பதிவு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 75 சதவீதத்திற்கு குறைவாக வருகைப்பதிவு உள்ள மாணவர்கள் தேர்வு எழுத முடியாது. மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்கள் இருந்தால் அதற்கான சான்று வழங்க வேண்டும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு 60 முதல் 74 சதவீத வருகைப்பதிவு இருக்க வேண்டும்.