வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளை நடந்து வந்தது. இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி குற்றவாளியை பிடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், சிவக்குமார், நந்தகோபால், சப்-இன்ஸ்பெக் டர்கள் நெடுமாறன், தனசேகர், பிரதாப்சந்திரன், செல்வம், கஜேந்திரன் கொண்ட தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் கொள்ளையனை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கம் சந்திப்பில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த காரை வழிமடக்கி போலீசார் சோதனை செய்த போது காரில் இருந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார். இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணயில் அவர் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபர் செங்கல்பட்டு அடுத்த அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மணிமுத்து(வயது24) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 145 பவுன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் போலீசார் மணிமுத்துவை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.