மாவட்ட செய்திகள்

குண்டர் தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு

பொன்னேரி வட்டம் தேவனேரி கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23).

திருவள்ளூர்,

பொன்னேரி வட்டம் தேவனேரி கிராமம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23). கோவில்களில் நகை திருடிய வழக்கில் சோழவரம் போலீசார் வெங்கடேசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த தங்கபாண்டியன் மற்றும் அவரது சகோதரர் வரதராஜ் ஆகியோரை கத்தியால் தாக்கி அவர்களிடம் இருந்த ரூ.36 ஆயிரம் பறித்த வழக்கும் வெங்கடேசன் மீதுவெங்கல் போலீஸ் நிலையத்தில் இருந்தது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த தலையாரிபாளையம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித் என்கிற அஜித்குமார் (24). காய்கறி ஏற்றி வந்த மினி டெம்போவை அடித்து நொறுக்கி அதில் வந்தவர்களிடம் பணம் பறித்த வழக்கில் அஜித்குமாரை ஆரம்பாக்கம் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது கார்த்திக் என்பவரை அடித்து காயப்படுத்தியதாக மற்றொரு வழக்கும் இருந்தது. குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அஜித்குமார் மற்றும் வெங்கடேசன் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட அவர் மேற்கண்ட 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை நேற்று போலீசார் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.