உத்தமபாளையம்,
உத்தமபாளையத்தில் பக்தர்களே நிதி திரட்டி ரூ.1 கோடி செலவில் புனரமைத்துள்ள யோக நரசிங்கபெருமாள் கோவிலில் 73 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது.
உத்தமபாளையம் மெயின் பஜார் வீதியில் யோக நரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமை வாய்ந்த திருத்தலமாகும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலாகும். இக்கோவிலில் யோக நரசிங்க பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் கடந்த 1945-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கோவில் இருந்தும் எவ்வித பராமரிப்பும் இன்றி சிதிலம் அடைந்து காணப்பட்டது. இதையடுத்து இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் போதிய அளவு நிதி இல்லை என்று காரணம் காட்டி அதிகாரிகள் கோவிலை புனரமைக்கும் திட்டத்தை கைவிட்டனர்.
இதையடுத்து இப்பகுதியில் உள்ள பக்தர்கள் ஓம் நமோ நாராயணா பக்தசபை என்ற அமைப்பை தொடங்கி நிதி திரட்டினார்கள். மேலும் பக்தர்கள் தாமாகவே கோவில் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள முன்வந்தனர். இதனை அடுத்து நரசிங்க பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கோவில் மூலவர் விமானம், தாயார் விமானம், அன்னதானமண்டபம், கோவிலின் சிறப்புகளை கூறும் வகையில் கல்சுவர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.1 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் முழுமை அடைந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-வரலாற்று சிறப்பு மிக்க கோவிலை புனரமைக்கும் பணியை பக்தர்களே ஏற்று செய்துள்ளோம். தற்போது பணிகள் முழுமை அடைந்துள்ளது. கோவில் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு பக்தர்களின் பணியை பாராட்டினார்கள். கோவில் கும்பாபிஷேகத்தை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந்தேதி நடத்த அனுமதி அளித்துள்ளனர்.
அதன்படி 73 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோவில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. எனவே கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.