மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாயக்கர் குப்பம், பூம்புகார் மீனவ கிராமங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரம்

கொரோனா தொற்று பரவாமல் இருக்க நாயக்கர் குப்பம், பூம்புகார் மீனவ கிராமங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

திருவெண்காடு,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் இதர சமூக மக்களை கொரோனா நோய் அதிக அளவில் தாக்கவில்லை. ஏனெனில் கடலில் இருந்து வீசும் காற்றில் அதிக அளவு ஆக்சிஜன் காணப்படுவதும், உப்பு தன்மை உடைய காற்று, மனித உடலில் படுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

தடுப்பு நடவடிக்கைகள்

இந்த நிலையில் சீர்காழி தாலுகாவில் பூம்புகார், நாயக்கர் குப்பம், தொடுவாய், பழையாறு உள்ளிட்ட 17 மீனவ கிராமங்கள் உள்ளன. மேற்கண்ட கிராமங்களில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க, கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நாயக்கர் குப்பம், பூம்புகார் ஆகிய மீனவ கிராம நுழைவு பகுதியில் தடுப்புகள் அமைத்து, அந்த இடத்தில் கிராம பணியாளர்களை கொண்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நிபந்தனை விதிப்பு

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்,

தற்போது நோய் தொற்று கடலோர கிராமங்களில் பரவ தொடங்கி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு வெளி நபர்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே கிராமங்களுக்குள் வரவேண்டும். அப்படி வருபவர்களும், தமிழக அரசு வழிகாட்டுதலின்படி முக கவசம், கையுறை உள்ளிட்டவைகளை அணிந்து வரவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

கூடுமானவரை வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாம் என கிராம மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம். கொரோனா நோய் தொற்றை அறவே ஒழித்திட எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இதனை கருத்தில் கொண்டு தான் ஊரடங்கு முடியும் வரை மீன்பிடி தொழில் கூட கிடையாது. எனவே கடலோர மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கிறோம் என்றனர்.