மாவட்ட செய்திகள்

குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும்

குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும்

தளி:

வீடுகள், இறைச்சிக்கூடங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகளில் சேருகின்ற கழிவுகளை சேகரிப்பதற்காக உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது.அவற்றை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நகராட்சி நிர்வாகம் திடீரென திரும்ப எடுத்துக் கொண்டது.இதனால் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதற்கு வழியில்லாமல் சாலை ஓரங்களில் கொட்டி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்ற இறைச்சி பிளாஸ்டிக் கழிவுகள் நாகராட்சி பகுதியில் சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நாள்தோறும் வீதிவீதியாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வந்தாலும் அதிகரித்து வரும் பயன்பாடு காரணமாக வீடுகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கி வருவது தொடர்கதையாக உள்ளது.அதைத்தொடர்ந்து ஒரு சிலர் அவற்றைக் கொண்டு சென்று சாலையின் ஓரங்களில் கொட்டி வருகின்றனர். அதேபோன்று நகராட்சி பகுதியில் இயங்கி வருகின்ற இறைச்சி கூடங்கள் மற்றும் கடைகளில் சேகரமாகும் கழிவுகளை குப்பைத் தொட்டிகள் இல்லாததால் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே கொட்டப்பட்டு வருகிறது. அவற்றுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அதில் இருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகளை ஏற்படுத்தியும் வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் நடந்து செல்கின்ற பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இதனால் தொற்று நோய்களை ஆரம்ப காலத்திலேயே தடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகளை நிறுவுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.