மாவட்ட செய்திகள்

எம்.எல்.ஏ.அலுவலகத்துக்கு பூட்டு

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது.

காரைக்குடி,

தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது.

கட்சி கொடிகள் அகற்றம்

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று நேற்று முன்தினம் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சிகளின் விளம்பர பேனர், சுவரொட்டிகள், அரசியல் கட்சி கொடிகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவிர பல்வேறு அரசு அலுவலகங்களில் வைத்துள்ள அரசியல் தலைவர்கள் படம், முதல்-அமைச்சர் படம் ஆகியவற்றையும் அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு பூட்டு

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய 4 சட்ட மன்ற தொகுதிகள் உள்ளன.. இதில் மானாமதுரை தொகுதி தனித்தொகுதியாக இருந்து வருகிறது. தேர்தல் ஆணையம் நன்னடத்தை விதிமுறைகள் விதித்துள்ளதால் இந்த 4 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள் சார்பில் வரையப்பட்ட விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகளை வருவாய்த்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இதுதவிர காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை, சிவகங்கை ஆகிய பகுதியில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தை தேர்தல் அதிகாரிகள் நேற்று பூட்டும் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் கார்களில் உள்ள சிவப்பு விளக்குகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்