மயிலாடுதுறை:
கீழவெண்மணி தியாகிகள் நினைவு பொதுக் கூட்டம் மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடந்தது.
தியாகிகள் நினைவு பொதுக்கூட்டம்
மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கீழவெண்மணி தியாகிகள் நினைவு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. முன்னதாக திருவாரூர் சாலை பெரியார் சிலையில் இருந்து புறப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் கண்ணாரத்தெரு வழியாக சின்னக்கடை வீதி வந்தடைந்தனர். ஊர்வலத்தில் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும், கல்வி நிலையங்களில் சாதிய, மதவாத கருத்துகளை புகுத்துவதற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து சின்னக்கடை வீதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் புதுக்கோட்டை ஜனார்த்தனன், திருச்சி மோகன்குமார், தஞ்சை பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ வரவேற்று பேசினார்.
இதில் நாகை மாலி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து ஜெய்பீம் திரைப்பட கதையின் உண்மை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ராஜக்கண்ணுவின் மனைவி பார்வதி, அவருக்கு உதவிய கோவிந்தன், வக்கீல் சந்திரசேகரன் ஆகியோருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜகண்ணு கொலை வழக்கில் நடந்த சம்பவங்கள் குறித்து கோவிந்தன், பார்வதி ஆகியோர் விளக்கி பேசினர். இந்த கூட்டத்தில் மாநில துணை செயலாளர் பிரகாஷ், அரவிந்தசாமி, மாணவிகள் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, திருவாரூர் மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் மணிபாரதி நன்றி கூறினார்.