தஞ்சாவூர்,
தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதாவின் வரிசையில் அவர்களது இடத்தை நிரப்பக்கூடிய தகுதி நடிகர் ரஜினிக்கு உள்ளதாக தொல்.திருமாவளவன் கூறிய கருத்து பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஆனால் பல ஊடகங்கள் கருத்து கணிப்பு நடத்தியதில் தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது என தெரியவந்துள்ளது. மக்கள் எதிர்பார்க்கக் கூடிய, அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வேண்டும் என்பது எனது விருப்பம்.
தொழில்துறை, மருத்துவத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வடமாநிலங்களை விட குறிப்பாக பா.ஜனதா ஆட்சி நடக்கும் மாநிலங்களை விட தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இது கழகங்களின் ஆட்சியில் வந்தது. குறிப்பாக தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான் சாத்தியப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தஞ்சை மாவட்ட செயலாளர்கள் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், மாநில மகளிரணி துணைத் தலைவர் காரல்மார்க்ஸ், நகர செயலாளர் நீலமேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
வருமுன் காப்போம்
முன்னதாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் வைரவிழாவையொட்டி இலவச மார்பகம் மற்றும் கர்ப்பப்பைவாயின் புற்றுநோய் ஆரம்ப நிலை கண்டறிதல் சிறப்புமுகாம் தஞ்சையில் நடந்தது.
முகாமை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்து பேசும்போது, வரும்முன் காக்கும் இயல்பு நம்மிடம் இல்லை. மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மருத்துவமுகாம் நடத்தி அவர்களுக்கு உடல்ரீதியாக உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக வரும்முன் காப்போம் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் தலைவர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை.
இதனால் வரும்முன் காப்போம் திட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. மக்களுக்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ளும்.
அந்த வகையில் தான் தி.மு.க. ஆட்சியில் இன்றைக்கு இல்லாவிட்டாலும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தி.மு.க.வினர் குளங்களை தூர்வாரி வருகின்றனர்.
இன்றைக்கு பெண்கள் எல்லாம் மதுக்கடை முன்பு நின்று போராடி கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்திருந்தால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தலைவர் கருணாநிதி முதல் கையெழுத்து போட்டு இருப்பார் என்று கூறினார்.