வாலாஜாபாத்,
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சனாவுல்லா (வயது 45). இவருடைய மகன்கள் பிலால் (20), ரஷீத் (18).
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியில் மாந்தோப்பு ஒன்றை குத்தகைக்கு எடுத்து, 3 பேரும் அங்கேயே தங்கி இருந்து மாம்பழம் வியாபாரம் செய்து வந்தனர்.
ரம்ஜான் பண்டிகையான நேற்று சிறப்பு தொழுகையில் கலந்துகொள்வதற்காக சனாவுல்லா தனது 2 மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்றார்.
தந்தை பலி
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேந்தமங்கலம் பகுதியில் சென்றபோது வேலூரில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சனாவுல்லாவும், அவருடைய 2 மகன்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையா மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி சனாவுல்லா பரிதாபமாக இறந்தார்.
2 மகன்களுக்கு சிகிச்சை
படுகாயம் அடைந்த அவருடைய மகன்கள் பிலால், ரஷீத் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர். ரம்ஜான் தொழுகைக்கு சென்றபோது நடந்த விபத்தில் தந்தை பலியானதுடன், 2 மகன்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.