காஞ்சீபுரம்,
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 18). அதே பகுதியை சேர்ந்தவர் ரோசித் (18 ) நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஒரு மோட்டார்சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ராஜகுளம் என்ற இடத்தில் வந்த போது, அதே திசையில் பின்னால் வந்த ஒரு அரசு பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் நவீன்குமார் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ரோசித் படுகாயம் அடைந்து, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை தேடி வருகிறார்.