மாவட்ட செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுப்போனது.

வேலூர்

அணைக்கட்டை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 29). இவர் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் அடையாள அட்டை வழங்கும் பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். கோபி தனது மோட்டார் சைக்கிளை காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் நிலையம் அருகே நிறுத்தி பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையின்போது வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார். அதில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க முககவசம் அணிந்திருந்த நபர் மதியம் 12.30 மணியளவில் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பட்டப்பகலில் அரசு ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு போன சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.