அன்னவாசல், பிப்.16-
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பரம்பூர் ஊராட்சி தாலம்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வேலாயி. விவசாய தம்பதியான இவர்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். பின்னர் இரவில் வீட்டின் பின்புறம் உள்ள பட்டியில் அடைத்து வைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இதனால் சுப்பையா வீட்டின் பின்புறம் உள்ள பட்டிக்கு சென்று பார்த்தபோது, 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கி கொண்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பையா சத்தம்போட்டார். இதனையடுத்து அப்பகுதியினர் திரண்டு வந்தனர். ஆட்கள் வருவதை கண்ட மலைப்பாம்பு திணறியபடி ஒரு ஆட்டுக்குட்டியை முதலில் கக்கியுள்ளது. பின்னர் மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனையடுத்து இன்னொரு ஆட்டுக்குட்டியையும் கக்கியது. மலைப்பாம்பு விழுங்கியதில் 2 ஆட்டுக்குட்டிகளும் செத்தன. இதைத்தொடர்ந்து அப்பகுதி வாலிபர்கள் மலைப்பாம்பை பிடித்து பரம்பூர் காப்புக்காட்டில் கொண்டுசென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.