மாவட்ட செய்திகள்

வீரகேரளம்புதூரில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு முஸ்லிம் அமைப்பினர் உதவி

வீரகேரளம்புதூரில் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு முஸ்லிம் அமைப்பினர் உதவி செய்தனர்.

சுரண்டை,

வீரகேரளம்புதூர் திருமுருகன் திருச்சபையினர் தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தைப்பூச நிகழ்ச்சி கடந்த 2-ந் தேதி வீரகேரளம்புதூரில் சப்பர பவனி நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று மாலையில் பழனிக்கு பக்தர்கள் குழு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இந்த பக்தர்கள் குழுவை வழியனுப்பு நிகழ்ச்சி, சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக நடந்தது. வீரகேரளம்புதூர் முஸ்லிம் ஜமாஅத் மற்றும் இளைஞர் பொதுநல அமைப்புகள் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் தலைமை தாங்கி, முஸ்லிம் ஜமாத்தார்கள் கொடுத்தபயண பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உணவு பொருட்களை பக்தர்கள் குழுவினரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முஸ்லிம் ஜமாத் தலைவர் கோதர் முகைதீன், செயலாளர் முகம்மது மைதீன், துணைத்தலைவர்முகம்மது நசீர், பொருளாளர் சம்சுதீன், துணைச்செயலாளர் அப்துல் வகாப் மற்றும் திருமுருகன் பாதயாத்திரை குருசாமி மீனாட்சி சுந்தரம், துணை ஒருங்கிணைப்பாளர் சக்தி குமார், இளைஞர் பொதுநல அமைப்பு நிர்வாகிகள் ஆல்பர்ட், அந்தோணி ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT