பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் இருந்து ரமணமுதலிபுதூருக்கு (எண் 17) அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை நேற்று முன்தினம் இரவு டிரைவர் அருண்பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றார்.
கோட்டூர் அருகே ரமணமுதலிபுதூர் தண்ணீர் மடம் பகுதியில் வளைவில் பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று பஸ்சின் பின்புறம் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக பஸ்சில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
உடனே டிரைவர் பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு சென்று பார்த்தார்.
அப்போது பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல்வீசியது தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் கோட்டூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
அதில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பஸ்சின் மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் தப்பி ஓடிய மர்ம நபர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்ற னர்.
இதற்கிடையே அந்த சாலையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசு பஸ் மீது மர்ம நபர்கள் கல்வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.