மாவட்ட செய்திகள்

தொட்டியம் அருகே காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பலி

தொட்டியம் அருகே காய்ச்சலுக்கு ஒரு வயது குழந்தை பலியானது.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் இளையராஜா. எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்கு ரோஷிகா (வயது 1) என்ற பெண் குழந்தை இருந்தது.

ரோஷிகாவிற்கு நேற்று முன்தினம் மதியம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ரோஷிகாவின் ரத்த மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில் நேற்று அதிகாலை குழந்தை ரோஷிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். பரிசோதனை அறிக்கை வருவதற்குள் காய்ச்சல் ஏற்பட்ட மறுநாளே ஒரு வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT