திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் கிராமம் கோமதி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 27). ஆட்டோ டிரைவர். பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த ஜான் என்பவரிடம் கடனாக ரூ.7ஆயிரம் வாங்கியிருந்தார். அந்த பணத்தில் அவர் ரூ.5 ஆயிரம் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ.2 ஆயிரத்தை திருப்பி கொடுக்கவில்லை.
நேற்று முன்தினம் பிரசாந்த் தனது ஆட்டோவில் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவை வழிமறித்த ஜான் மற்றும் அவருடன் வந்த பெரிய குப்பத்தை சேர்ந்த ஆகாஷ், விச்சு ஆகியோர் மீதமுள்ள பணத்தை கேட்டு தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் பிரசாந்தை குத்திவிட்டு அவரது ஆட்டோவை ஓட்டிச்சென்று விட்டனர்.
இது குறித்து பிரசாந்த் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக ஜான், ஆகாஷ், விச்சு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.