பூந்தமல்லி,
சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் ஸ்ரீவந்த் கே.அருண் (வயது 17). இவர், சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மெட்ரோ ரெயில் மூலம் கோயம்பேடு வந்திறங்கிய அருண், மெட்ரோ ரெயில் நிலைய மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து விட்டார்.
உடனடியாக அங்கிருந்த மெட்ரோ ரெயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மாணவர் அருணை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தற்கொலையா?
இது குறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார், பலியான அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர் அருண், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து அறிய மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.