நெல்லை:
நெல்லை பெருமாள்புரம், மேலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக டிப்-டாப் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்துள்ளார். அவர் தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி சாலையோரங்களில் உள்ள கடை வியாபாரிகளிடம் பணம் மற்றும் பழம் வாங்கியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த வியாபாரிகள், இதுகுறித்து பெருமாள்புரம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வியாபாரியிடம் பணம் பறித்த டிப்-டாப் வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் பாளையங்கோட்டையை சேர்ந்த பிரதீப் சாம்சுந்தர் (வயது 38) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.