விருதுநகர்,
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். இந்தநிலையில் நேற்று ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு வருமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து அவர் விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். ஆனால் அவருக்கு கடந்த 23-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்தார்.
தனக்கு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் கிடைக்காத நிலையில் விசாரணைக்கு வந்து இருந்தார். ஆனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சான்றிதழ் கேட்டதால் அவர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அனுமதிக்கப் படவில்லை. இதனை தொடர்ந்து அவர் காரில் இருந்தபடியே தனது அடுத்த விசாரணைக்கு கால அவகாசம் வழங்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் எழுத்துபூர்வமாக விண்ணப்பித்து விட்டு அங்கிருந்து திரும்ப சென்றார். ராஜேந்திர பாலாஜியுடன் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனும் வந்திருந்தார்.