மாவட்ட செய்திகள்

“விசாரணைக்கு வர தயார்”

குற்றவியல் வழக்குகள் தொடர்பாக தகவல் தெரிவித்தால் விசாரணைக்கு வர தயாராக உள்ளேன் என கே.டி.ராஜேந்திரபாலாஜி சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

குற்றவியல் வழக்குகள் தொடர்பாக தகவல் தெரிவித்தால் விசாரணைக்கு வர தயாராக உள்ளேன் என கே.டி.ராஜேந்திரபாலாஜி சார்பில் போலீசில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

ஜாமீனில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கு தொடர்பாக அவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு நான்கு வார கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து அவர் திருச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விசாரணைக்கு வர தயார்

அவர் தற்போது, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள தனது வீட்டில் தங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சார்பில் அவரது வக்கீல் மாரீஸ் குமார், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் தெரிவித்துள்ள மனுவில், திருத்தங்கலில் தான் தங்கியுள்ள முகவரியை குறிப்பிட்டு விசாரணைக்கு எப்போது வர வேண்டும் என தகவல் தெரிவித்தாலும், விசாரணைக்கு வர தயாராக உள்ளதாகவும், முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே 2 குற்றவியல் வழக்குகள் தொடர்பாக ராஜேந்திர பாலாஜியிடம் அடுத்து வரும் நாட்களில் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.