பூந்தமல்லி,
பூந்தமல்லியில் பழமையான திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துக்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை தனியார் சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வாடகைக்கு விட்டு பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர்.
அதே போல பூந்தமல்லியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான 4 கிரவுண்ட் நிலத்தை பச்சையப்பன் என்பவர் ஆக்கிரமித்து 10-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். இதில் மெக்கானிக் கடை, லாரி உதிரிபாகங்கள் விற்கும் கடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன.
ஐகோர்ட்டு உத்தரவு
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி பச்சையப்பனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றும்படி உத்தரவிட்டது.
ரூ.5 கோடி நிலம் மீட்பு
இதைதொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, வருவாய்துறையினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கோவில் இடத்தில் ஆக்கிரமித்து கட்டி இருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் இடித்து அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அங்கு பூந்தமல்லி உதவி கமிஷனர் ஆல்பிரட் வில்சன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுட்டு இருந்தனர்.