போடி:
போடி அம்மாகுளம் 4-வது தெருவை சேர்ந்தவர் செந்தட்டிக்காளை (வயது 55). இவர் ஆண்கள் சுயஉதவிக்குழு தலைவராக உள்ளார். அந்த குழுவில் 10 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் வங்கியில் கடன் வாங்குவதற்காக போடி திருமலாபுரம் பகுதியில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கணேசன் மனைவி அருட்செல்வியை தொடர்பு கொண்டனர். அவர் வங்கியில் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதற்காக ஒவ்வொருவரிடமும் தலா ரூ.6 ஆயிரத்து 200 வீதம் 10 பேரிடம் ரூ.68 ஆயிரம் 200 முன்தொகையாக பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு அருட்செல்வி கடன் வாங்கி தராமல் மோசடி செய்தார். அந்த பணத்தை திருப்பி கேட்ட செந்தட்டிக்காளையை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் செந்தட்டிக்காளை புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருட்செல்வியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.